Friday, October 12, 2007

கண்ணனே என் கணவன்

எல்லோரையும் போல் அவனில்லை
பூ தலையில் வைத்ததில்லை
புதுப்புடவை தந்ததில்லை
கொஞ்சி பேசி எனை
குளிர வைத்ததில்லை..

வாரமொரு முறை
வக்கணையாய் உண்டு வர
வெளியில் சென்றதில்லை..

புதுப்படம் பொன் நகை
பார்த்தாயிற்று
பல காலங்கள்..

எல்லோரையும் போல் அவனில்லை

சோறாக்கி சுகம் தரும்
தாதியாய் எண்ணவில்லை
எனை அவன் தன்
பாதியாய் எண்ணினான்
உயிரின் மீதியாய் எண்ணினான்..

சோறாக்கி எனக்களித்து
தான் தாயாகி நின்றான்
என் தாய்மைக்கு
துணையாக நின்றான்..

ஏறிவரும் வேளையிலே
ஏணியாகி நின்றான்
துயர் கொண்ட நேரத்தில்
தோழனாகி தோள் தந்தான்..

அன்பு தனைக் காட்டி
எனைஅவன்
அடிமையாக்கி விட்டான்
தனைதந்து எனையவன்
ஆட்கொண்டுவிட்டான்..

எதிபார்ப்பு எதுவுமின்றி
எனை வென்று விட்டான்
என் பாட்டின் வரிகளிலே
பொருளாகி விட்டான்...

இறைவா..

இப்படியே என் வாழ்வு
இனிதாக வேண்டும்
ஈரேழு பிறவிக்கும்
இவனே என் துணையாகவேண்டும்..

இருள் நீக்கும் சுடறாக
அவனாக வேண்டும்
அச் சுடறேறும் திரியாக
நானாக வேண்டும்..

உயிர் காக்கும் மருந்தாக
அவனாக வேண்டும்
அம் மருந்தாக்கும் முறையாக
நானாக வேண்டும்..

நிழல் தரும் மரமாக
அவனாக வேண்டும்
அம் மரம் தாங்கும் நிலமாக
நானாகாவேண்டும்..

நான் அவனாக வேண்டும்
அவன் நானாக வேண்டும்...